Thursday, February 20, 2014

தேர்வு எழுதுபவர்களுக்கு துணை நிற்கும் யோக ஹயக்ரீவர்!

chettipunniyam narasimhar

வித விதமான சீருடை அணிந்த பள்ளி மாணவ, மாணவியர் தேர்வு எழுதுவதற்கான தேவையான ஹால் டிக்கெட் மற்றும் எழுது பொருட்களுடன் ஒரு இடத்தில் குவிந்து இருந்தனர். இத்தனைக்கும் அந்த இடம் தேர்வு மையம் அல்ல, ஒரு கோவில். ஆம் நிறைய ஞாபகசக்தியை தந்து, தேர்வு பயத்தை நீக்கி, அதிக மதிப்பெண் பெறுவதற்கு அருள்பாலிக்கும் யோக ஹயக்ரீவர் கோவில்தான் அது. பெற்றோர்கள், ஆசிரியர்கள் துணையுடன் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வந்திறங்கிய மாணவ,மாணவியர்  பயபக்தியுடன் ஹயக்ரீவரின் பாதத்தில் தங்களது ஹால் டிக்கெட் மற்றும்  பேனா, பென்சில்களை பயபக்தியுடன் வைத்து, அவரது ஆசீர்வாதத்தை பெற்று சந்தோஷத் துடனும், திருப்தியுடன் திரும்பிக்கொண்டு இருந்தனர். இந்த கோவில் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டால் நீங்களும் போய் உங்கள் பிள்ளைகளுக்கு ஆசீர்வாதம் பெற்று திரும்பலாம். காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு வட்டம் செட்டி புண்ணியம் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமையான  ஸ்ரீதேவநாத பெருமாள் கோவில் உள்ளது. இங்கு வரதராஜப் பெருமாள் மூலவராக இருந்து சேவை சாதித்து வருகிறார்.
கடந்த 1848-ம் வருடம் திருவஹிந்தபுரத்தில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்ட தேவநாத பெருமாளும், ஹயக்ரீவரும், மற்றும் தஞ்சாவூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ராமரும் பக்தர்களுக்கு உற்சவர்களாக இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். இதில் குதிரை முகம் கொண்ட யோக ஹயக்ரீவர் நான்கு கைகளுடன் சங்கு சக்கரதாரியாக யோக நிலையில் இருக்கிறார். இவரை வணங்கினால் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும், ஞாபக சக்திகூடும் என்பதுடன் தேர்வு எழுதும் போது துணை நிற்பார் என்பதால் பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர் ஹால் டிக்கெட் வாங்கிய கையோடு தேர்வு எழுதப்போகும் பேனாவுடன் இங்கு வந்து ஹயக்ரீவரின் பாதத்தில் வைத்து அவரது ஆசீர்வாதத்துடன் எடுத்து செல்கின்றனர். பல ஆண்டுகளாக இது தொடர்வதாலும், வந்து சென்ற மாணவ, மாணவியர் பலன் பெற்றதாலும் தேர்வு நேரத்தில் அதுவும் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக செட்டி புண்ணியம் ஹயக்ரீவர் கோவில் என்றே இது பெயர் பெற்றுவிட்டது. சென்னையில் இருந்து செங்கல்-பட்டு போகும் வழியில் செங்கல்பட்டிற்கு முன்னால் சிங்கப்பெருமாள் கோவில் என்ற இடத்தில் இருந்து வலது புறத்தில்  மூன்று கிலோமீட்டர் தூரம் பயணித்தால் அமைதியான, அழகான செட்டி புண்ணியம் கிராமம் வரும். இந்த கிராமத்தின் மையத்தில் உள்ளது இந்த ஹயக்ரீவர் கோவில்.

நடை திறந்திருக்கும் நேரம்:

காலை 7.30 மணியில் இருந்து பகல் 12 மணி

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

செங்கல்பட்டில் இருந்தும், சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்தும் ஆட்டோ போன்ற வாகனங்களில் வரலாம், கட்டணம் அதிகம்தான்.  நேரில் வரமுடியாத பக்தர்களுக்காக யாகத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட ஹயக்ரீவர் படம் பிரசாதம் மற்றும் பேனாக்கள் கொண்ட பாக்கெட்டை தபாலில் அனுப்பி வைப்பதும் நடைபெறுகிறது. கோவிலுக்கான போன் எண்:8675127999. கோவில் நடை திறந்து இருக்கும் நேரத்தில் மட்டும் போன் செய்யவும்.  யோக ஹயக்ரீவர் உங்களுக்கு அமோகமாய் அருள் பாலிப்பாராக.

No comments:

Post a Comment